2.ஏனக் குருளைக்கு அருளியது
முன்னொரு காலத்தில் வேளாளர் குலத்திற் பிறந்த சேனைத்தலைவன் ஒருவனுக்குப் பன்னிரண்டு பிள்ளைகள் பிறந்து சிறப்புற வளர்ந்து வரும்போது, சேனைத்தலைவனும் அவன் மனைவியும் இறந்துபோக, பன்னிரு பிள்ளைகளும் போற்றுவாரின்றி, நாட்டைவிட்டு வேற்று நாட்டுக்குச் சென்று காடுகளைத் திருத்தி வயிறு வளர்த்து வந்தார்கள். ஒரு நாள், அந்தக் காட்டில் தவம் செய்துவந்த ஒரு முனிவனைப் பார்த்துச் சிரித்து ஏளனம் செய்தார்கள். முனிவன் சீற்றம் கொண்டு ” நீங்கள் அனைவரும் பன்றிக்குட்டிகளாகப் பிறந்து, தாயை இழந்து துன்புறுக” எனச் சுடுமொழி கூறினான். தங்கள் குற்றத்தை உணர்ந்து முனிவனைப் பணிந்து, சுடுமொழியை விடுவிக்க மன்றாடிக் கேட்டனர். முனிவனும் இரங்கி “சோமசுந்தரக் கடவுள், உங்களுக்கு நற்கதி அளிப்பார்” எனக் கூறினாா். அவ்வாறே பன்னிருவரும் பன்றிக்குட்டிகளாகப் பிறந்தனர். தாய்ப் பன்றியை, அங்கு வேட்டையாடி வந்த அரசன் எய்து கொல்லவே, அக்குட்டிகள் பால் இல்லாமல் துயருற்று அழுதன. இத்துயர் கண்டு உலகுக்கு எல்லாம் அம்மையப்பராகிய சோமசுந்தரக் கடவுள், பன்றி உருவத்துடன் வந்து அப்பன்றிக்குட்டிகளுக்குப் பால் கொடுத்து வளர்த்தார். அவையும் யானைக் கன்றுபோல் ஓங்கி மேட்டைப் பள்ளமாகவும் பள்ளத்தை மேடாகவும் கோட்டால் உழுது திரிந்தன.
பின்னர், திருவருளால் பன்றிஉடலை விட்டு ஒரு வேளாண் தலைவனுக்குப் பிள்ளைகளாகப் பிறந்து ஒத்த உருவம், நிறம், அறிவு, குணம் முதலிய வாய்க்கப்பெற்று உலகத்தோர் மதிக்கும் வண்ணம் வளர்ந்தனர். இவர்களது அறிவின் மேம்பாட்டைக் கேள்விபட்ட பாண்டியன், பன்னிருவரையும் அழைத்து, அவர்கள் ஒரே தன்மையாய் விளங்குவதைக் கண்டு மந்திரிகளாக அமர்த்தினான். அவர்களும், படிப்படியாக அரசாங்கப் பணியில் உயர்ந்து உலகமெல்லாம் அதிசயிப்பச் சாற்றரும் பகை கடந்து சிலைபொலி தடக்கை வேந்தைத் திசை விசயஞ் செய்வித்து வரிசை புனை வன்னியராகிச் சிலகாலம் மண்மேல் வாழ்ந்து கொன்றைச் சடைமுடியான் திருவருளால் சிவலோகம் அடைந்தனா். அவர்கள் வாழ்ந்த மலை பன்றிமலை என வழங்கப்பெறுகிறது.