42. திருநாளைப்போவார் நாயனார் (நந்தனார்)
தமிழ்நாட்டில் கொள்ளிட நதியால் வளம்பெற்ற ஆதனூரில் பிறந்தவா் நந்தனார். மாட மாளிகைகள் ஒருபுறமிருந்தாலும் மறுபுறம் சேரி. அச்சேரியிலுள்ள புலையர்களின் தலைவராக இருந்தார் நந்தனார். அவர் பிறப்பு அறிவறிந்த காலந்தொட்டு சிவபிரானிடத்து மிகுந்த அன்புடையவரானார். திருவடி நினைவன்றி மறந்தும் மற்றைய நினைவு கொள்ளாதவர். அவர் தமது குலப்பிறப்பிற்கேற்ற கொள்கையால் ‘புறத்தொண்டு’ புரிந்து வந்தவர்.
வைதீஸ்வர கோவிலிருந்து 3கி.மீ. தூரத்தில் இருக்கும் திருப்புன்கூர் சிவலோக நாதரை வணங்க ஆர்வம் கொண்டார். கோவிலைச் சுற்றி வலம் வந்தார். அப்போதிருந்த சமுதாய அமைப்பின் காரணமாக கோவில் உள்ளே செல்ல முடியாததால் வெளியே நின்றார். நந்தி பெரிய நந்தியாகையால் பெருமானை தரிசிக்க முடியவில்லை. காட்சி கிடைக்கவில்லை என மனம் வருந்தினாா். அவரின் அன்பைக் கண்ட சிவலோகநாதர் நந்தியை விலகச் சொல்லிக் காட்சி தந்தார்,
அவ்வூரில் அடியவர் பயன் பாட்டிற்கும் ஆண்டன் திருமுழுக்கிற்கும் ஓர் குளம் வெட்டினாா். சிவத் தலங்களை வழிபடுவதோடு தேவையான தோல், வார், நரம்பு கோரோசனை முதலியவற்றைத் தந்தும் தொண்டு செய்து வந்தார். என்ன செய்தும் கோவில் உள்ளே சென்று வழிபட முடியவில்லை.
தில்லையில் கூத்தரை வழிபட வேண்டும் என்பது அவருடைய நீண்டகால அவா. அந்த உணர்வு வரும் போதெல்லாம் நம்மால் அது முடியுமா என மாய்ந்து போவார். சந்திப்போரிடம் சிதம்பரம் போவேன் நாளைப் போவேன் என்பார். எப்போதும் இதையே கூறிக் கொண்டிருந்ததால் மக்கள் அவரை திருநாளைப்போவார் என்றனர். ஒருநாள் மிகச்சிந்தித்து இப்பிறவி எப்போது முடியும் எனத் தெரியாது எனவே செய்யும் அறப்பணியை உடனே செய்ய வேண்டும் என்று உடன் புறப்பட்டார் தில்லையை நோக்கி.
இந்த உடலோடு புனிதமான தில்லைக்குள் எப்படிச் செல்வது என வருந்தினார். எல்லையிலிருந்தே அழகு தமிழில் பாடி பரவசமானார். கண்ணீர் மல்க தன் நிலை குறித்து வருத்தப்பட்டார். பலநாள் அங்கிருந்தபடியே வழிபட்டார் நந்தனார். ஒருநாள் இரவு கூத்தபிரான் தோன்றி நந்தனே உன் விருப்பப்படி முப்பரிநூலோடு நம் காட்சி காண வருவாய் என அருள் புரிந்தார், தில்லைவாழ் அந்தணர்கள் கனவில் தோன்றி உண்மைத் தொண்டன் ஊரின் எல்லையில் தன் உடம்பு கீழானது எனக் கூறி தங்கியுள்ளான். நீங்கள் எரியமைத்து அதில் மூழ்கச் செய்யுங்கள். தூய உடம்பு பெற்ற அவரை நம் சன்னதிக்கு அழைத்து வாருங்கள் என்றார்.
அடுத்த நாள் தில்லைவாழ் அந்தணர்கள் இறைவன் சொன்னவாறே சென்று நந்தனாரை தூய்மைப்படுத்தி அழைத்து வந்தனர். கோபுரதரிசனம் கண்டார். இறைவனைக் காண ஓடினார். மூல கருவறையில் சென்று மறைந்தார். நந்தனாரை யாரும் அதன்பின் காணவில்லை. நாளைப்போவார் அம்பலவர் திருவடியிற் கலந்து மறைந்தமை கண்டு தில்லைவாழந்தணர்கள் அதிசயித்தார்கள். முனிவர்கள் துதித்துப் போற்றினார்கள். வந்தணைந்த திருத்தொண்டராகிய நந்தனாரது வினைமாசறுத்துத் தம்முடைய திருவடிகளைத் தொழுது இன்புற்றிருக்க அந்தமில்லா ஆனந்தக் கூத்தினர் அருள் புரிந்தார்.
குலம் : புலையர்
அவதாரத் தலம் : மா ஆதனூர்
முக்தி தலம் : சிதம்பரம்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : புரட்டாசி – ரோகிணி
முகவரி : அருள்மிகு நடராஜர் திருக்கோயில், சிதம்பரம் – 608001.
கடலூர் மாவட்டம்.