27. கோச்செங்கட்சோழ நாயனார்
சோழநாட்டிலே காவிரிச் சந்திர தீர்த்தத்தின் அருகிற் பெருமரங்கள் நிறைந்த நீண்ட குளிர்ந்த சோலையொன்றுள்ளது. அச்சோலையிலுள்ள ஒரு வெண்ணாவல் மரத்தடியில் வெளியுருப்பட்ட சிவலிங்கத் திருமேனியைக் கண்டு பெருந்தவத்தையுடைய வெள்ளை யானை தன் துதிக்கையினால் நன்னீரை முகந்து நாள்தோறும் திருமஞ்சனஞ் செய்து மலர்தூவி வழிபாடு செய்தது. அதனால் அவ்விடத்திற்குத் திரு ஆனைக்கா என்னும் பெயருண்டாயிற்று. அங்கே மெய்யுணர்விற் சிறந்த சிலந்தி ஒன்று இறைவன் திருவடிமேல் சருகு முதலியன் உதிராவண்ணம் தன் வாயின் நூலினால் மேற்கட்டிபோன்ற அழகிய பந்தல் அமைத்தது.
யானை வழிபடச் சென்றபோது சிலந்தி வாய்நீர் நூலினால் அமைத்த அப்பந்தரினைத் தூய்மையற்றது என நினைந்து சிதைத்தது. அதுகண்ட சிலந்தி யானையின் கைசுழன்றமையாற் பந்தர் சிதைந்ததென்றெண்ணி மீளவும் தன் வாய் நூலால் அழகிய பந்தர் செய்தது. அதனை மறுநாளும் யானை அழித்துப் போக்கியது. அதுகண்ட சிலந்தி ‘இறைவர் திருமுடிமேற் சருகுமுதலியன விழாதபடி நான்வருந்தியிழைத்த நூற்பந்தரை இவ்வாறு அழிப்பதோ? என வெகுண்டு யானையின் துதிக்கையினுள்ளே புகுந்து கடித்தது. அவ் வருத்தம் பொறாத யானை தன் துதிக்கையினை நிலத்தில் மோதி அறைந்து வீழ்ந்திறந்தது. அதன் துதிக்கையினுள்ளே புகுந்த கடித்த சிலந்தியும் உயிர் துறந்தது. ஆனைக்கா இறைவர் அருள் புரியும் நெறியால் அவ்வெள்ளை யானைக்கு வீடுபேறடைய அருளினார்.
சோழமன்னன் சுபதேவன்- கமலவதி ஆகியோர் மழலை வேண்டி தில்லைக் கூத்தபிரானை வேண்ட இறைவன் இராணியின் கருவில் திருவானைக்காவில் பெருமானுக்கு பந்தல் இழைத்து வழிபட்ட சிலந்தி மகவாய்ச் சார்ந்தது. கரு முதிர்ந்து மகப்பேறு வேலை வந்தபோது இன்னும் ஒரு நாழிகை கழித்து குழந்தை பிறக்குமானால் மூன்றுலகம் அரசாளும் என சோதிடர்கள் கூறினார்கள்.
அச்சொல் கேட்ட கமலவதி அவ்வாறு ஒரு நாழிகை கழித்துக் குழந்தை பிறக்கும்படி என் காலைப் பிணித்து தலைகீழாக மேலே தூக்கி நிறுத்துக என்று சொல்ல அவ்வாறே செய்து ஒரு நாழிகை கழித்துக் ஆண் குழந்தை பிறந்தது. காலநீடிப்பால் அக்குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன. குழந்தையைக்கண்ட தாய் என் கோச்செங்காணானோ என அழைத்து உயிர் நீக்கினாள். மன்னன் குழந்தையை வளர்த்து உரிய பருவத்தில் மணிமுடி சூட்டி தான் தவநெறியை சார்ந்து சிவலோகம் சென்றான்.
அவ்வாறு பிறந்த கோச்செங்கட் சோழர் திரு அருளினாலே முன்னைப் பிறப்பின் உணர்வோடு சைவத்திருநெறி தழைக்க நாட்டில் சிவாலயங்கள் பலவற்றைக் கட்டும் திருப்பணியை மேற்கொண்டார். வெண்ணாவல் மரத்தினூடே பெருமான் வீற்றியிருந்தருளும் நிலையில் அதனை கோவிலாக மாற்றினார். சோழநாட்டில் சிவபெருமான் திருக்கோவில்கள் பலவற்றை அமைத்து நிகழும் பூசனைக்கு பெரும் பொருள் வகுத்து செங்கோல் ஆட்சி நடத்தினார். தமிழ் நாட்டில் எழுபது மாடக் கோவில்களை அமைத்தார். திருநறையூரில் திருமாலுக்கு மணிமாடம் என்ற கோவிலைக் கட்டினார். தில்லைவாழ் அந்தணர்களுக்கு திருமாளிகை கட்டுவித்து இறுதிவரை திருவடித்தொண்டு செய்து இறைவன் திருவடி அடைந்தார்.
இறைவன்: ஜம்புகேஸ்வரர்
இறைவி : அகிலாண்டநாயகி
தலமரம் : வெண்ணாவல்
தீர்த்தம் : காவிரி
குலம் : மன்னர்
அவதாரத் தலம் : திருஆனைக்கா
முக்தி தலம் : சிதம்பரம்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : மாசி – சதயம்
முகவரி : அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருஆனைக்கா – 620005. திருச்சி மாவட்டம்.